தூரத்து கோபுரம்
தூரத்துக் கோபுரம் அந்த விடியற்காலையில், கும்பகோணத்து மாமா, மாயவரத்திலிருந்து சித்தியும், சித்தப்பாவும், இன்னும் அப்பாவின் உறவினர்கள் பலரும் வந்திருந்தார்கள். அம்மா முந்தானையை இழுத்துப் போர்த்தி, யானை மண்டியிட்டு உள் வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்தாள். கண்கள் தரையை வெறித்தபடியிருக்க, கண்ணீர் மூக்கின் ஓரமாக வழிந்து மூக்குத்தியின் கீழ் முத்து போல தொங்கிக்கொண்டிருந்தது. மாயவரத்து சித்தி விசும்பிக்கொண்டிருந்தாள். கும்பகோணம் மாமா எதையோ பறிகொடுத்தவர் போல தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். அவரை முறுக்கு மீசையும் முரட்டு பார்வையாக மட்டும் பார்த்தவன் நான். மற்றவர்களிடம் பதட்டமான அமைதி நிலவியது. ஏதோ அசம்பாவிதம் என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அரை தூக்கத்திலிந்து எழுந்த என்னை அம்மா தலையசைத்து அழைத்தாள். நான் பாயிலிருந்து மண்டியிட்டுத் தவழ்ந்து சென்று அம்மா மடியில் முகம் புதைத்துக்கொண்டேன். அரசூர் தாத்தா மெல்ல தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார். ”ஒனக்குப் பித்துக் கொண்டுடுச்சி தம்பி. நா பாத்து வச்ச புள்ளதான் அது, அதுமேல அபாண்டம் சொன்னா நாக்கு அழுவிப் பூடும். பூமி நோவாத புள்ள அது. யோசி...